இலங்கை
எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பை விரைந்து உருவாக்குக!

எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பை விரைந்து உருவாக்குக!
பிரதான எதிர்க்கட்சி அழுத்தம்
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்க வேண்டும். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் அந்தப் பணிகள் முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் அரசாங்கம் வசம் உள்ளது. அதற்கு பிரதான எதிர்க்கட்சியான நாமும் ஆதரவளித்தால் பேராதரவு கிடைக்கப்பெறும். புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். எனவே, விரைவில் அதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
வடக்கிலும், தெற்கிலும் அனைத்து இன மக்களினதும் ஆணையை பெற்றதாகவே அரசாங்கம் உள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. மக்களின் ஆதரவு உள்ள வேளையிலேயே இந்த முக்கிய பணியை நிறைவேற்ற வேண்டும்.
ஜனாதிபதி பதவியேற்று 6 மாதங்களாகின்றன. நாடாளுமன்றத்தில் 4 தடவைகள் உரையாற்றினார். எனினும், புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம் பற்றி பேசவில்லை. சுதந்திர தினத்தில் உரையாற்றினார். அதன்போதும் இது தொடர்பில் குறிப்பிடவில்லை. புதிய அரசியலமைப்புக்கு பாதீட்டில் உரிய ஒதுக்கீடுகளும் இல்லை.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு சபையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றேன். அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவுக்குத் தேவையான வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் – என்றார்.