பொழுதுபோக்கு
பாஸ்போர்ட் மோசடி வழக்கு: அஜித் பட நடிகை மீது வழக்குப் பதிவு

பாஸ்போர்ட் மோசடி வழக்கு: அஜித் பட நடிகை மீது வழக்குப் பதிவு
நடிகர்கள் அஜித், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்த சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாப்பா மீது மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாப்பா. சின்னத்திரையில் பிரபலமடைந்த இவர் அதன் தொடர்ச்சியாக விஸ்வாசம், வேதாளம், சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், நடன உதவி இயக்குநர் ரகு என்பவரை ஷர்மிளா திருமணம் செய்து கொண்டார்.நடிகை ஷர்மிளா கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை சென்னை அண்ணா நகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதன் பின்னர் இவரது பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் அதற்காக விண்ணப்பித்திருந்தார். தற்போது இவர் வசிக்கும் வியாசர்பாடி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் புதிப்பித்தலுக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இத்துடன் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் இவர் சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதில் முறைகேடு இருப்பதாகக் கூறி நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த இவர், இந்திய குடியுரிமை பெற்றது எப்படி எனவும், ஆதார் உள்ளிட்ட இந்திய ஆவணங்கள் எப்படி இவருக்கு வழங்கப்பட்டன எனவும் கேள்வி எழுந்தது. அதனடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஷர்மிகா தாப்பா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.