இலங்கை
இந்தியாவுடனான ஒப்பந்தம் புலிவாலைப் பிடித்த கதை!

இந்தியாவுடனான ஒப்பந்தம் புலிவாலைப் பிடித்த கதை!
இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை, புலிவாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். 76 வருடகால சாபக்கேடு எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள்தான், சாபக்கேடான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். உண்மையில் இவர்களும், இவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களும்தான் நாட்டுக்கு சாபக்கேடான விடயங்களாகும்.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் எமக்கு தெரியாது. ஆனாலும் பாதுகாப்பு ஒப்பந்தம் என அரசாங்கம் கூறியுள்ளது. எந்தவொரு நாட்டுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
பலம்பொருந்திய நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டால், அதிலிருந்து தன்னிச்சையாக விலக முடியாது. எனவே, இது புலிவாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும்- என்றார்.