Connect with us

விளையாட்டு

கொடுத்த வாக்கை காப்பாற்றிய சுனில் கவாஸ்கர்: வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ. 30,000 நிதியுதவி

Published

on

Vinod Kambli INR 30 000 monthly aid from Sunil Gavaskar fulfils promise Tamil News

Loading

கொடுத்த வாக்கை காப்பாற்றிய சுனில் கவாஸ்கர்: வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ. 30,000 நிதியுதவி

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இந்திய அணியில் 1991 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,561 ரன்களை குவித்துள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு, வினோத் காம்ப்ளி இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவர் கடைசியாக கடந்த 2019-ல் மும்பையில் நடைபெற்ற டி20 லீக்கில் பயிற்சியாளராக செயல்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராகவும் அவர் அறியப்படுகிறார். இந்நிலையில், வினோத் காம்ப்ளி அதிக அளவில் மது அருந்தி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த அவர், இப்போது அதனையும் தொலைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தனது சிகிச்சைக்கு வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. பி.சி.சி.ஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தையே தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது. சச்சின் டெண்டுல்கரின் நிதி உதவியுடன், 2013 ஆம் ஆண்டில் அவருக்கு இரண்டு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.இந்த நிலையில், இந்திய ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் வினோத் காம்ப்ளிக்கு  உதவிக்கரம் நீட்டியுள்ளார். அதன்படி, வினோத் காம்ப்ளிக்கு ஆதரவளிக்க கவாஸ்கர் தனது சாம்ப்ஸ் (CHAMPS) அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார்.1999 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் இருந்து, ஏப்ரல் 1 முதல் வினோத் காம்ப்ளியின் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர உதவியாக 30,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் 30,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனில் கவாஸ்கரின் நீண்டகால நண்பரும் முன்னாள் நிர்லான் அணி வீரருமான அனில் ஜோஷி, சுனில் கவாஸ்கர் வினோத் காம்ப்ளியை கடந்த ஆண்டு வான்கடே மைதானத்தில் சந்தித்த பிறகு அவரது மருத்துவர்களைச் சந்தித்ததாகவும், உடனடியாக அவருக்கு உதவி வழங்குமாறு தனது அறக்கட்டளைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.”கடந்த ஆண்டு காம்ப்ளியின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்ததிலிருந்து கவாஸ்கர் அவருக்கு உதவ விரும்பினார். வான்கடே மைதானத்தில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, காம்ப்ளியின் இரண்டு மருத்துவர்களான டாக்டர் ஷைலேஷ் தாக்கூர் மற்றும் மற்றொரு மருத்துவர் மற்றும் என்னையும் கவாஸ்கர் சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து முழுமையாக விளக்கப்பட்ட பிறகு, உடனடியாக நிதி மற்றும் மருத்துவ உதவியைத் தொடங்குமாறு அவர் சாம்ப்ஸ் (CHAMPS) அறக்கட்டளைக்கு அறிவுறுத்தினார்,” என்று அனில் ஜோஷி கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன