இலங்கை
அமெரிக்காவின் வரிகளை கையாளத் திட்டம் என்ன; முன்னாள் ஜனாதிபதி ரணில் கேள்வி

அமெரிக்காவின் வரிகளை கையாளத் திட்டம் என்ன; முன்னாள் ஜனாதிபதி ரணில் கேள்வி
அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனை அவசர நிலைமையாகக்கருதி, தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ரணில் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில் உள்ளதாவது:
புதிய பரஸ்பர வரிக்கொள்கை அமுலாவதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். எனினும், 3 மாதங்களுக்கு பிறகு மேற்படி வரி அமுலுக்கு வரும். இது தேர்தல்கால உறுதிமொழியென்பதால் திட்டத்தை ட்ரம்ப் மீளப் பெறமாட்டார்.
இலங்கைமீது விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி குறைக்கப்பட்டாலும்கூட, 25 அல்லது 30 சதவீத வரியை செலுத்த வேண்டி ஏற்பட்டால் அது எமக்குப் பெரும் பிரச்சினையாக அமையும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். இந்த மூன்றுமாத காலப் பகுதிக்குள் உலக நாடுகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும்.
வரி விதிப்பால் ஆடை உற்பத்தித் துறையில் தொழில் இழப்புகள் ஏற்படலாம். அதனுடன் தொடர்புபட்ட ஏனைய உப தொழில்களின் வருமானத்துக்கும் தாக்கம் வரும். அதுமட்டுமல்ல எமது நாட்டு பொருளாதாரத்துக்கும் தாக்கம் வரும்.
2028ஆம் ஆண்டில் நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். அதனை இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும். தற்போது எம்முன் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும். இந்த விடயங்களை ஓர் அவசர நிலையாக அரசாங்கம் கருத வேண்டும். இதற்கெதிராக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் – என்றார்.