இலங்கை
மறிக்கமறிக்க மணலுடன் ஓடிய டிப்பரின் மீது துப்பாக்கிச் சூடு!

மறிக்கமறிக்க மணலுடன் ஓடிய டிப்பரின் மீது துப்பாக்கிச் சூடு!
மன்னார், அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடுவில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிப் பயணித்த டிப்பர் வாகனம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டது.
டிப்பர் வாகனத்தில் சட்டவிரோத மணல் கைப்பற்றப்பட்ட நிலையில், சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நடந்துள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர்.
ஆயினும் டிப்பர் வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் ஆபத்தான முறையில் பயணித்தபோது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி டிப்பர் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்கள் சான்றுப் பொருள்களுடன் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அடம்பன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாகச் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.