இலங்கை
ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டம்!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டம்!
ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
நாங்கள் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை.
எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சனை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்து செல்ல வேண்டும். மதியம் 10 மணி ஆனதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர். மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை.
ஒரு ஊழியர் உப்பளத்தில் வேலை செய்யும்போது இறந்தால்கூட எமது பணத்தில் தான் அவரது சடலத்தை கொண்டு செல்ல வேண்டும், அவரது கண்ணீர் அஞ்சலி பத்திரிகைகள் கூட எமது பணத்தில் தான் வெளியிட வேண்டுமே தவிர நிறுவனம் எமக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது.
இந்த உப்பளத்தை திறந்து வைக்கும்போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறினார், ஆனால் எமக்கு பின்னர் வழங்கப்பட்டது 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே.
அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே அளவான போனஸ் கொடுப்பனவே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால் இங்கு எமது வரவினல பார்த்து, மிகவும் குறைந்த போனஸ் தொகையே கொடுப்பார்கள். வேலைக்கு வராதது எமது பிழை அல்ல. எமக்கு சுழற்சி முறையிலான வேலையையே வழங்குகின்றனர் ஆகையால் நாங்கள் எப்படி ஒழுங்காக வேலைக்கு வருவது? எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுகிறது.
ஒரு நாள் 5 ஊழியர்களின் உழைப்பு மட்டும் போதும் இங்கு வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொடுப்பதற்கு. அவ்வளவு இலாபம் ஈட்டும் உப்பளமாகவும், இலங்கையின் மிகவும் பெரிய உப்பளமாகவும் இந்த உப்பளம் காணப்படுகிறது.
ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர். பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களை கூட மதிப்பதில்லை. இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அதனை தட்டிக்கழிக்கின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை அம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்த தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத்தான் வேண்டும். ஆனால் இங்கே அவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை.
ரஜ உப்பு என்ற பெயரை மாற்றம் செய்து ஆனையிறவு உப்பு என்ற பெயரில் மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார் ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை.
இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்களை கதைப்பதற்கு உள்ளே அழைத்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட ஊழியர்களும் உள்ளே சென்றோம். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. உள்ளே சென்று கலந்துரையாடியபோது அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் மண்வெட்டி பிடி திருடினோம், உப்பு திருடினோம் என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றார்களே தவிர எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதுபோல் தெரியவில்லை.
இது பார்ப்பதற்கு வெளியே ஒரு தேசிய உப்பளமாக காணப்பட்டாலும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.