இலங்கை
உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை

உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை
இணுவில் பகுதியை சேர்ந்த தர்சன் கஜிசனா என்ற சிறுமி, 8 வயதுக்குக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இது தொடர்பில் அவருடைய தந்தை நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
எட்டு வயதுக்குட்பட்ட உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்கு எனது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்காசிய இளையோர்களுக்கான தொடரிலும் எனது மகள் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், நிதி அனுசரணை இல்லாத காரணத்தால் அதில் எனது மகள் கலந்துகொள்ளவில்லை.
கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். மேலும் கடந்த டிசெம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.
எனவே தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி தேவையாகவுள்ளது. நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எனது மகள் மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்ப்பார் – என்றார்.