இலங்கை
ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு!

ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு!
ஜனாதிபதி அநுர நடவடிக்கை
ஊழல்களையும் மோசடிகளையும் தடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் அமைச்சு மட்டத்திலான புலனாய்வுப் பிரிவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதிக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு ஜனாதிபதியால் தீர்வுகளும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.