வணிகம்
ஆபத்து இல்லாத முதலீடு; 7.7% வரை வட்டி: என்.எஸ்.சி திட்டம் குறித்து தெரியுமா?

ஆபத்து இல்லாத முதலீடு; 7.7% வரை வட்டி: என்.எஸ்.சி திட்டம் குறித்து தெரியுமா?
தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Scheme) என்ற ஒரு திட்டம் இந்திய அரசால் பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 7.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதன் வட்டி விகிதத்தை அரசாங்கம் பகுப்பாய்வு செய்வதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ. 1000 என்ற அளவில் முதலீடு செய்யலாம். மேலும், இதன் அதிகபட்ச முதலீட்டிற்கு உச்ச வரம்பு விதிக்கப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம். தேசிய சேமிப்பு பத்திரத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.இந்த சேமிப்பு கணக்கை எந்த அஞ்சல் அலுவலகத்தில் வேண்டுமானாலும் திறக்க முடியும். மேலும், ஒரு நபர் தற்போது வசிக்கும் நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு மாற்றலாகி செல்லும் போது, இதனை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பத்திரத்தின் மூலமாக வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ரூ. 1.5 லட்சம் வரை 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கோர முடியும். இது மட்டுமின்றி இந்த திட்டத்தில் இருந்து டி.டி.எஸ் பிடித்தம் கிடையாது.அதனடிப்படையில், சந்தை அபாயங்கள் இல்லாமல் பாதுகாப்பான நிதி முதலீடு வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கலாம். இது குறித்த கூடுதல் விவரஙக்ளை அறிய விரும்பினால், அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் பார்வையிடலாம்.