இலங்கை
எரிபொருள் விநியோகத் தாமதத்தைத் தவிர்க்க காங்கேசன் களஞ்சியத்திலிருந்தே இனி யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்!

எரிபொருள் விநியோகத் தாமதத்தைத் தவிர்க்க காங்கேசன் களஞ்சியத்திலிருந்தே இனி யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்!
எரிபொருள் வரிசைகளுக்கு முடிவு
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் உள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்புநிலையங்களுக்கு இனிவரும் நாள்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின் போதும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் வழங்கலில் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்தே, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் உதயனுக்கு மேலும் தெரிவித்ததாவது:-
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காங்சேன்துறையிலுள்ள எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்றுள்ளன. இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாள்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்றார்.
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையின் புனரமைப்புக் காரணமாக, இவ்வளவு காலமும் அநுராதபுரத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன. இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான கோரிக்கை கிடைத்தும் சில நாள்களின் பின்னரே எரிபொருள் வந்துசேர்ந்தது. இதனாலேயே, கடந்தகாலங்களில் தாமங்கள் ஏற்பட்டிருந்தன. இனி உடனுக்குடன் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதால் விநியோகத் தாமதத்தால் எரிபொருள் வரிசைகள் ஏற்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.