இலங்கை
இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசிய ஈரான் ; அதிபயங்கர தாக்குதல்!

இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசிய ஈரான் ; அதிபயங்கர தாக்குதல்!
இஸ்ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளமை போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 19 ஆம் திகதி கொத்து (கிளஸ்டர்) குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது.
சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை இஸ்ரேல் மீது ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
ஈரான் வீசிய கொத்து குண்டுகளால், இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா மற்றும் டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
சைரன் ஒலி எழுப்பியதும் மக்கள் பதுங்கு குழிகளிலும், வணிக வளாகங்களின் கார் பார்க்கிங் பகுதிகளிலும் சென்று பதுங்கினர். ஈரான் வீசிய ஏவுகணைகள் பல கட்டிடங்கள் மீது விழுந்து வெடித்தன.
பீர் சேவா நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலக கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்ததில், பலர் காயம் அடைந்தனர்.
இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்கும் விதமாக, ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராகசிக்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதோடு இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர் நீடித்து வரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு ஈரான் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இ
தனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2-வது அவசர கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே,அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.
கொத்து (கிளஸ்டர்) குண்டு, மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கொத்து குண்டுகள் தரையில் விழுந்து வெடிக்காமல் கிடந்தாலும் ஆபத்துதான். வெடிக்காமல் கிடக்கும் கொத்து குண்டுகளை, யாராவது தொட்டாலோ,மிதித்தாலோ கண்ணிவெடி போல பயங்கரமாக வெடிக்கும்.
எனவே, ‘தரையில் கிடக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை தொட வேண்டாம். அது போன்ற பொருட்களை பார்த்தால், அவசர உதவி எண் ‘100’-க்கு போன் செய்ய வேண்டும் என மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கையில் 2009 ஆண்டு இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.