இலங்கை
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரும் ‘அணையா விளக்குக்கு’ அனைவரும் பேராதரவு!

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரும் ‘அணையா விளக்குக்கு’ அனைவரும் பேராதரவு!
ஒற்றுமையாக அணிதிரள அழைப்பு
யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆரம்பமாகவுள்ள ‘அணையா விளக்கு’ மூன்று நாள் கவனவீர்ப்புப் போராட்டத்துக்குப் பல தரப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய ஒற்றுமையான கவனவீர்ப்பு முக்கியமானது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்றும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய இந்த கவனவீர்ப்பு மிக முக்கியமானது என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரியும், சர்வதேச கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் “மக்கள் செயல்” என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு வெகுசனப்போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் முதல் இரண்டு தினங்களில் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான செய்தி கண்காட்சியும், நாடக ஆற்றுகையும் நடைபெறும்.
மூன்றாம் நாளான 25ஆம் திகதி பெரும் கவனவீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும். யாழ். பல்கலைக்கழக சமூகமும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழரசுக் கட்சி அழைப்பு
“அணையா விளக்கு” பொதுசனப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தின் இரண்டாம் நாளான 24 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அனைவரும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.