இலங்கை
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகிறார் வோல்கர் ட்ரக்!

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகிறார் வோல்கர் ட்ரக்!
தமிழ்க் கட்சியினருடன் சந்திப்பு புதைகுழியையும் பார்க்கத் திட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக், யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதரவுள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தவுள்ள அவர், யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடுவார் என்று தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக். நான்கு நாள்கள் பயணமாக நேற்றுமுன்தினம் இலங்கைக்கு வந்திருந்தார். பிரதமர் ஹரிணி, வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத். நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், தனது பயணத்தின் பிரதான அம்சங்களில் ஒன்றாக இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
வோல்கர் ட்ரக்கின் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தின்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கமும் தெரிவித்துள்ளது. இதனால், அவர் இன்று செம்மணி மனிதப் புதைகுழிக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகின்றது.
அத்துடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினருடனும் வோல் கர்ட்ரக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என்றும் தெரியவருகின்றது. மனித உரிமைகள் ஆணையாளர் நாளை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.