இலங்கை
செம்மணிப் புதைகுழிக்குள் மேலும் நான்கு சிதிலங்கள்; இதுவரை 38 என்புத்தொகுதிகள் அடையாளம்!

செம்மணிப் புதைகுழிக்குள் மேலும் நான்கு சிதிலங்கள்; இதுவரை 38 என்புத்தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் சிறுவரின் என்புத்தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி உட்பட, நான்கு புதிய என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின், ஏழாம் நாள் நடவடிக்கைகள் நேற்றையதினம் இடம்பெற்றன. நேற்றையதினம் புதிதாக 4 சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை 38 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 30 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரணித்தா மற்றும் வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.