இலங்கை
வேளமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிசீலனை!

வேளமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிசீலனை!
கிளி.கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாலிகிதன் அவர்களை கட்சியில் இருந்து நீக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிசீலனை செய்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜீவராசா என்பவர் அடங்கலாக வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பில் ஒரு வார காலத்தினுள் விளக்கம் கோரி கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளது, அந்தக் கடிதம் வருமாறு:
அருணாசலம் வேழமாலிகிதன் தவிசாளர்,
கரைச்சி பிரதேச சபை இல 827, திருநகர் வடக்கு, கிளிநொச்சி.
விளக்கம் கோரல்
கடந்த 19.06.2025 அன்று தாங்களும் இன்னும் மூவரும் வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்து உரையாடியதாக அறியக்கிடைத்தது.
அந்த மூவரில் ஒருவர் அண்மையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட திரு. ஜீவராசா என்றும் அறியக்கிடைத்தது. இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலிலும் எமக்கெதிராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்த விடயங்கள். வெளிப்படையாகவே கட்சிக்கு எதிராக செயற்படும் ஒருவர் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றில் உங்களுடன் சேர்ந்து கலந்து கொள்வதும் அது பகிரங்க செய்தியாக வெளிவருவதும் கட்சி நலனை வெகுவாக பாதிக்கும் என்பது தாங்கள் அறிந்திருக்க வேண்டியதொன்று.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தங்களுக்கு போட்டியிட சந்தர்பம் வழங்க முன்னர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமைக்கு தாங்கள் மன்னிப்பு கோரியதோடு எதிர்காலத்தில் இப்படியான குற்றத்தை செய்தால் எவ்வித விசாரணையுமின்றி கட்சியில் இருந்தும் கட்சி சார்பில் வகிக்கும் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதற்கு உங்களது ஒப்புதலை வழங்கியுள்ளீர்கள்.
ஆகவே திரு. ஜீவராஜா போன்ற ஒருவரை ஆளுனரை சந்திக்க சென்ற உத்தியோகபூர்வ குழுவில் சேர்த்து கொண்ட குற்றத்திற்காக நீங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்பட கூடாது என்பதற்கு காரணம் காட்டி ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு பதில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் அல்லது திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால் நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.
என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பி வைத்துள்ள கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை