இலங்கை
பாதாளக்குழுத் தலைவர்கள் மிக விரைவில் கைதாவர்; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

பாதாளக்குழுத் தலைவர்கள் மிக விரைவில் கைதாவர்; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும். அரசியல் தரப்பினருக்கும் இடையே தொடர்புகளுண்டு. பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- பாதாளக் குழுக்களுக்கு இடையிலான போதைப்பொருள் வியாபாரத்தின் விளைவாகவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகிறன. அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சியினருக்கும் பாதாளக் குழுக்களுக்கும் இடையில் தொடர்புண்டு. கடந்த காலங்களில் அரசியல் அனுசரணையுடன் பாதாளக் குழுக்கள் எழுச்சி பெற்றன.
பாதாளக் குழுக்களின் முக்கியமான தலைவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சியினர் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – என்றார்.