இலங்கை
செம்மணிப் புதைகுழியில் மேலும் 4 என்புத்தொகுதிகள்!

செம்மணிப் புதைகுழியில் மேலும் 4 என்புத்தொகுதிகள்!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கையின் போது, மேலும் நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் பதின்மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றையதினம் இடம்பெற்றன. இதன்போதே நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தால் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 56 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை 50 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஸ்ட சட்டத்தரணி ஞா.ரணித்தா, முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.