இலங்கை
கொழும்பில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய நபர் கைது

கொழும்பில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய நபர் கைது
கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் ஓட்டுநர், செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த பெண் பயணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் காரணமாகக் குறித்த பெண் சட்டத்தரணி, தாம் பதிவு செய்த முச்சக்கர வண்டியைப் புறக்கணித்து வேறு ஒரு முச்சக்கர வண்டியில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
இதன்போதே தனியார் வாகன வாடகை நிறுவன முச்சக்கர வண்டி ஓட்டுநர், குறித்த பெண் சட்டத்தரணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், மாளிகாவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.