இலங்கை
வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி தனம் ; குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி தனம் ; குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர்.
இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தினர்.
இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
பொலிஸாரின் இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், “நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்.” என்று தெரிவித்தனர்.
இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
மக்களின் கொதிப்பால் தடுமாறிய பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், “பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்’ என்று விடாப்பிடியாக நின்றனர்.
இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது.
அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.