வணிகம்
ஆன்லைன் கடன் ஆபத்துகள்: கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

ஆன்லைன் கடன் ஆபத்துகள்: கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
நாட்டில் மக்கள் கடன் பெறும் முறையை, டிஜிட்டல் கடன் செயலிகள் மாற்றியுள்ளன. வங்கிகளுக்கு செல்லாமல், சில நொடிகளில் மொபைல் போன் மூலம் தனிநபர் கடனை எளிதாக பெற முடியும்.இருப்பினும், இந்த வசதி சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது. பல அறியப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் செயலிகள் தற்போது சந்தையில் இயங்கி வருகின்றன. இதனால், பல கடன் வாங்குபவர்கள் மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கடன் வசூல் தொடர்பான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எந்தவொரு டிஜிட்டல் கடன் செயலி மூலம் கடன் பெறுவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்களை இங்கே காணலாம்.1. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத செயலி:நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பும் செயலி, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி நிறுவனம் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்தால் (NBFC) இயக்கப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது மிக முக்கியம். பல ஒழுங்குபடுத்தப்படாத செயலிகள் முறையற்ற வகையில் செயல்படுகின்றன. அவை கடன் வழங்கும் விதிகளை பின்பற்றுவதில்லை.2. தெளிவற்ற அல்லது மறைமுகக் கட்டணங்கள்:ஒரு உண்மையான கடன் வழங்கும் தளம், பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம், கடன் திருப்பி செலுத்தும் காலம் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்களை தெளிவாகக் குறிப்பிடும். அனைத்து சட்டப்பூர்வ தளங்களின் முக்கிய நோக்கம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சேவை செய்வதாகும். இந்த விவரங்கள் ஏதேனும் தெளிவற்றதாக இருந்தால், அது ஒரு அபாயமாகும்.3. அதிகப்படியான அனுமதிகள் மற்றும் தரவு அணுகல்:தனிப்பட்ட தொடர்புகள், மீடியா கோப்புகள், புகைப்படங்கள் அல்லது நிகழ்நேர இருப்பிடம் போன்றவற்றுக்கான அணுகலை கோரும் செயலிகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்படாத செயலியாக இருந்தால், அது தவறாக பயன்படுத்தப்படலாம்.4. மோசமான விமர்சனங்கள் அல்லது நம்பகத்தன்மை இல்லாத நிலை:எந்தவொரு கடன் செயலி மூலம் தனிநபர் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், முன்னணி ஆப் ஸ்டோர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் அந்த செயலியின் இருப்பை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். பயனர் மதிப்புரைகள், கருத்துகள் இல்லாமை அல்லது தீர்க்கப்படாத புகார்கள் அதிகமாக இருந்தால், அதை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகக் கருத வேண்டும்.5. உதவி மையம் இல்லாத நிலை:நம்பகமான நிதி நிறுவனங்கள் எப்போதும் முறையான குறை தீர்க்கும் மற்றும் வாடிக்கையாளர் சேவை தளங்களை வழங்குகின்றன. அதனால்தான் உதவி எண், மின்னஞ்சல் அல்லது தெளிவாக வரையறுக்கப்பட்ட அலுவலக முகவரி இல்லாத செயலிகளை கவனமாக பார்த்து, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.