இலங்கை
செம்மணியில் தொடர்ந்தும் வெளிக்கிளம்பும் என்புக்கூடுகள்;

செம்மணியில் தொடர்ந்தும் வெளிக்கிளம்பும் என்புக்கூடுகள்;
இதுவரை 130 என்புக்கூடுகள் அடையாளம் 120 என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் 4 மனித என்புக்கூட்டத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரையில் 130 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,120 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நேற்று 29ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்றுப்புதிதாக 4 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதேவேளை, இரண்டாம் கட்டமாக கடந்த 14 நாள்களாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கைகளில் இதுவரை 55 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பான சட்டத்தரணி ஜெ.தற்பரன். சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் ஆகியோரும் அகழ்வு நடவடிக்கைகளின்போது முன்னிலையாகி வருகின்றனர்.