இலங்கை
தென்னக்கோனை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்; எவரும் எதிர்க்கவில்லை!
தென்னக்கோனை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்; எவரும் எதிர்க்கவில்லை!
தேசபந்து தென்னக்கோனை, பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நேற்றுக் காலை 11.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். எதிராக எந்தவொருவாக்கும் பதிவாகவில்லை. சில கட்சிகள் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதி பர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனால், மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ. டபிள்யூ.எம்லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.
இந்தக் குழு நாடாளுமன்றத்தில் கூடி, சட்டத்துக்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதன் போது அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டே பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
