இலங்கை
கண்ணியமான சமூகத்துக்கு பாடசாலைகளே வழிகாட்டிகள்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
கண்ணியமான சமூகத்துக்கு பாடசாலைகளே வழிகாட்டிகள்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறப்பான தலைமைத்துவத்தை தங்கள் பாடசாலைகளுக்கு வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு ‘ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் மூன்று விடயங்களில் பிரதானமாகக் கவனம் செலுத்தியுள்ளது. வறுமைத் தணிப்பு, எண்ணிமம்படுத்தல் (டிஜிற்றல் மயமாக்கல்), தூய்மை இலங்கை என்ற அந்த மூன்று விடயங்களிலும் தூய்மை இலங்கை என்ற செயற்றிட்டம் மிகப் பிரதானமானது.
எமது சுற்றாடலையும், எம்மையும் சுத்தமாக வைத்திருப்பது மாத்திரம் இதன் நோக்கம் அல்ல. எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தனி நபரிலிருந்து அது ஆரம்பித்துச் சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்லவேண்டும். சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும்.
எனவே, ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் உயர்வான தலைமைத்துவத்தைப் பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும். அதன் ஊடாக எதிர்காலச் சந்ததியினரான மாணவர்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் – என்றார்.
