இந்தியா
வாக்குதிருட்டு மூலம் ஆட்சி அமைத்தது பா.ஜ.க – முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
வாக்குதிருட்டு மூலம் ஆட்சி அமைத்தது பா.ஜ.க – முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான சில தகவல்களை கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ”வாக்குதிருட்டு மூலம் ஆட்சி அமைத்த பிரதமர் மோடியை கண்டித்தும், ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியை கண்டித்தும் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பேரணி நடந்தது.இதற்கு போட்டியாக பா.ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடந்தது. இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியின் உருவப்படம் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ்துறைக்கு ஒரு வாரம் கெடு கொடுக்கிறோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வருகிற 12- ஆம் தேதிக்கு பின்பு டி.ஜி.பி.அலுவலக முற்றுகை போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், கோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும்.கவர்னர் என்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில வளர்ச்சியிலும், மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் கவர்னரை அடிக்கடி சந்திக்கின்றனர். கவர்னர் நடுநிலையோடு இருக்க வேண்டும். புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை (திங்கட்கிழமை) காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார். பேட்டியின்போது வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
