இலங்கை
பதவி உயர்வு நடைமுறையால் சிரேஷ்ட நீதிபதிகள் பாதிப்பு; முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவிப்பு!
பதவி உயர்வு நடைமுறையால் சிரேஷ்ட நீதிபதிகள் பாதிப்பு; முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவிப்பு!
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கும்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரமே இதுவரை காலமும் வழங்கப்பட்டது. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த முறைமை மாற்றப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறை பின்பற்றப்படுவதால், சிரேஷ்ட நீதிபதிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இந்த விடயத்தில் நீதிபதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய அரசாங்கம் தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேல் நீதிமன்றங்களுக்கு 16 நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். நேர்முகப் பரீட்சை நடத்த நீதிமன்ற ஆணைக்குழுவால் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆனால் இரண்டு உறுப்பினர்களே இந்த நேர்முகப்பரீட்சையை நடத்தியுள்ளனர். நேர்முகப்பரீட்சை இடம்பெற்ற பின்னரே 3ஆவது உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு வழங்கும் பெயர்ப்பட்டியலில் 252 பேரின் பெயர்கள் உள்ளன. அதில் ஆரம்பநிலையில் இருக்கும் 35பேரில் இருந்தே 16 பேர் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்தப்பட்டியலில் முதல் 3 ஆவது நிலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை. அவர்கள் நீதிச்சேவையில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்கள்.
அதேநேரம் பட்டியலில் 33ஆவது இடத்தில் இருப்பவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்தான் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்ய உத்திரவிட்ட நீதிபதி இது எவ்வாறு சாத்தியமாகும்?-என்றார்.
