இலங்கை
இனமோதல்களற்ற நாடாக இலங்கையை மாற்றினோம்; அநுர ஜப்பானில் பெருமிதம்
இனமோதல்களற்ற நாடாக இலங்கையை மாற்றினோம்; அநுர ஜப்பானில் பெருமிதம்
இலங்கை வரலாற்றில் எந்த இனமோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. 76ஆண்டுகள் அரசியல் அதிகாரத்துக்குப் பின்னர், பொதுமக்களின் பணம் திருடவோ அல்லது வீணாக்கவோ செய்யாத ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கையின் அரசபொறிமுறை பழைய பழக்கங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். அதை மாற்றுவதற்கான முதற்படியை நாங்கள் எடுத்துள்ளோம். நமது நாடு பல்வேறு மக்கள் நிறைந்த நாடு. நமது நாட்டை முன்னோக்கி நகர்த்த,மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். நீண்டகால அரசியல் போராட்டத்தின் காரணமாக, மக்கள் பல்வேறு இனமோதல்கள் மற்றும் மதமோதல்களை உருவாக்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் அந்நியப்படுத்தப்பட்டனர். ஒருவருக்கொருவர் பிரிவினையையும், வெறுப்பையும் விதைக்கும் ஒரு நாடு முன்னேறமுடியாது. எனவே. நம் நாட்டில் உள்ள கலாசார பன்முகத்தன்மை, மொழி வேறுபாடுகள் மற்றும் மதவேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும் ஒருமித்த கருத்தைக் கொண்ட ஒரு அரசை நாம் கட்டியெழுப்பவேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாதவகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும். வடக்கு மக்கள் போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இனிமேல் போர்இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வடக்கு மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப்பாதுகாப்பு வழங்கி அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகின்றோம்- என்றார்.
