இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் தீபாவளி பரிசு! 3% அகவிலைப்படி உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் தீபாவளி பரிசு! 3% அகவிலைப்படி உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) அகவிலைப்படியில் (DA) கூடுதலாக 3% உயர்வு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் (DR) அதே அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் ஏற்கெனவே இருந்த 55 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் சேர்ந்து, மொத்த அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்கிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இந்தக் கொள்கை முடிவு, பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 49.19 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக கருவூலத்திற்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ. 10,083.96 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி அமைந்துள்ளது, என்று பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அமைச்சரவை அகவிலைப்படியை 2% உயர்த்தி, அதன் விகிதத்தை ஜனவரி 1, 2025 முதல் 55% ஆகக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 3% உயர்வு, ஒட்டுமொத்த அகவிலைப்படியை மேலும் உயர்த்தும்.பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வந்துள்ள இந்த அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
