இலங்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் தொடர்கிறது தாமதம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் தொடர்கிறது தாமதம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரா தெரிவித்துள்ளார் .
பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த செப்ரெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று முன்னதாக நீதி அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதைத் தக்கவைக்கும் எண்ணம் இல்லை. ஆனால் சட்டம் ஒன்றை இரத்துச் செய்யும்போது அதை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளவேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டவரைவைத் தயாரிக்கும் குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது. அன்று சட்டவரைவு இறுதிப்படுத்தப்பட்டுக் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். அதன்பின்னர் பொதுமக்கள் கருத்துக்களைப் பெறுவதற்காக சமூகத்தில் ஒரு மாதத்துக்கு அந்தச் சட்டவரைவுவிடப்படும். எதிர்வரும் 28ஆம் திகதி குழு அறிக்கையை வழங்கினால் சட்டவரை தயார் என்றஅறிவிப்பை எம்மால் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் வெளியிட முடியும். நாட்டின் பாதுகாப்புக் கருதி புதிய சட்டம் வரும் வரையில் இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்த நேரிடும் – என்றார்.
