இலங்கை
அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிற்றல் மயமாக்க நடவடிக்கை; பிரதம நீதியரசர் தெரிவிப்பு!
அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிற்றல் மயமாக்க நடவடிக்கை; பிரதம நீதியரசர் தெரிவிப்பு!
இந்தக் காலாண்டுக்குள் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிற்றல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வழக்குத் தொடுப்பவர்களுக்கான செலவும் குறைவடையும் எனப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடுசெய்திருந்த தேசிய சட்டமாநாடு கடந்த திங்கட்கிழமை கண்டியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் ஒருசில நிறுவனங்கள் தற்போது பகுதியயவில் டிஜிற்றல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, பதிவாளர் நாயகம் காரியாலயம், குடிவரவு குடியல்வு காரியாலயம், நீர் மற்றும் மின்கட்டணம் போன்றவை டிஜிற்றல் மயமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நீதிமன்ற கட்டமைப்பு இன்னும் கைகளாலும் ஆவணங்களின் அடிப்படையிலுமே செயற்பட்டுவருகிறது.
8 ஆயிரம் பக்கங்களைக்கொண்ட வழக்கு ஆவணம் ஒன்றுக்காக ஒரு தரப்புக்கு அதை நகல் அச்சிடுவதற்காக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் என்னிடம் சொன்னார்.
அந்த வழக்கின் ஆவணங்களுக்கான மொத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகச் செலவாகியுள்ளது. இவ்வாறான செலவுகள் காரணமாக அதிகமானவர்கள் வழக்குத்தொடுக்க பின்வாங்குகின்றனர்.
அதனால் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் டிஜிற்றல் மயப்படுத்துவதே எமது நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தக் காலாண்டில் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிற்றல் மயப்படுத்துவதுடன், ஏனைய நீதிமன்றங்களை அடுத்தவருடம் டிஜிற்றல் மயப்படுத்துவோம்- என்றார்.
