இலங்கை
இன்று மாலை இலங்கையை மிக நெருக்கமாக அண்மிக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
இன்று மாலை இலங்கையை மிக நெருக்கமாக அண்மிக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இன்று மாலை 3 மணியளவில் இலங்கையை மிக நெருக்கமாக அண்மிக்கும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்ததுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமையம் நகரும் வேகம் மிகவும் மந்தமாகக் காணப்படுகின்றது. இன்று காலை 8 மணியளவில் பானமயிலிருந்து 140 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் புயல் மாலை 3 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து 82 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொள்ளும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை 2 மணியள வில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கிலோமீற்றரில் காணப்படும். அதன் பின்னர் நண்பகல் ஒரு மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படும். நாளை மாலை 6 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து 109 கிலோமீற்றர் தூரத்தில் இந்தப் புயல் நிலைகொள்ளும். தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த இட அமைவுகள் குறிப்பி டப்படுகின்றன. நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் – என்றார். (ச)