இலங்கை
யாழ் இந்து மாணவன் உயிரிழப்பு
யாழ் இந்து மாணவன் உயிரிழப்பு
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த போது பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதுடன், அவர்களில் படுகாயமடைந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
படுகாயமடைந்திருந்த கை. சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.