விளையாட்டு

வயது மோசடி? ஐ.பி.எல் ஏலத்தில் வரலாறு படைத்த இளம் வீரர் மீது பரபர குற்றச்சாட்டு: விளக்கம் கொடுத்த வைபவ் தந்தை

Published

on

வயது மோசடி? ஐ.பி.எல் ஏலத்தில் வரலாறு படைத்த இளம் வீரர் மீது பரபர குற்றச்சாட்டு: விளக்கம் கொடுத்த வைபவ் தந்தை

18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கள்கிழமை  நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களில், மொத்தம் 182 வீரர்கள் விற்கப்பட்டனர். இதில் 62 வீரர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களை 10 அணிகளும் மொத்தமாக ரூ. 639.15 கோடி செலவழித்து வாங்கின. இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26.75 கோடி, பஞ்சாப்)  மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி,கொல்கத்தா) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.  ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். 18-வது சீசனை அடியெடியெடுத்து வைத்திருக்கும் ஐ.பி.எல். தொடரில், 13 வயது, 243 நாட்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷியை வசப்படுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே போட்டி நடந்தது. இறுதியில், அவரை ராஜஸ்தான் அணி ரூ. 1.1 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் தனது 13 வது வயதில் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. இந்நிலையில், ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்தில் வரலாறு படைத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி மீது வயது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கு அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.  இது தொடர்பாக வைபவ் சூர்யவன்ஷி தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி பேசுகையில், “அவர் இப்போது என் மகன் மட்டுமல்ல, முழு பீகாரின் மாநிலத்தின் மகன். என் மகன் கடுமையாக உழைத்திருக்கிறான். 8 வயதில், 16 வயதுக்குட்பட்ட  மாவட்ட அளவிலான போட்டிகளின் சோதனைகளில் சிறந்து விளங்கினார். நான் அவரை கிரிக்கெட் பயிற்சிக்காக சமஸ்திபூருக்கு அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்துச் செல்வேன். கிரிக்கெட் ஒரு முதலீடாக இருப்பதால், அவரை கிரிக்கெட்டில் முதலீடு செய்திருக்கிறோம். அவருக்காக நான் எனது நிலத்தை விற்றுவிட்டேன். நிதிச் சிக்கல்கள் இன்னும் உள்ளன.அவர் 8 1/2 வயதில் பி.சி.சி.ஐ நடத்திய எலும்பு சோதனைக்கு சென்றார். அவர் ஏற்கனவே இந்தியா அண்டர்-19 அணியில் விளையாடியுள்ளார். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அவர் மீண்டும் வயது சோதனைக்கு உட்படுத்த தயாராக  இருக்கிறார். பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ராகேஷ் திவாரியின் ‘ஆசீர்வாதம்’ எப்போதும் வைபவின் பயணத்திற்கு உதவியதாக இருந்தார்” என்று அவர் கூறினார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version