இந்தியா
21 பேருக்கு ஆயுள் தண்டனை!!
21 பேருக்கு ஆயுள் தண்டனை!!
கர்நாடக மாநிலத்தில் பட்டியலினப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 45 வயதான ஹொன்னம்மா என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். 27 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் அப்பெண்ணின் உடல் சாக்கடையில் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து துமக்கூரு பொலிஸார் மேற்கொண்ட வழக்கு விசாரணையின் போது ஹொன்னம்மா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதால் அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கோபமடைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீடு புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஹொன்னம்மா பொலிஸில் முறைப்பாடு செய்ததால் கோபமடைந்த ஆதிக்க சாதியினர், அன்றிரவு அவரை கல்லால் துரத்தி அடித்து கொன்று அவரது உடலை சாக்கடையில் தூக்கி எறிந்தனர்.
இவ்வாறாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், துமக்கூரு மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகி ரெட்டி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரங்கநாத். மஞ்சுளா, திம்மராஜு, ராஜு, ஸ்ரீனிவாஸ், ஆனந்தசுவாமி வெங்கடசுவாமி, வெங்கடேஷ், நாகராஜு, ராஜப்பா, ஹனுமந்தையா, கங்காதர் உள்ளிட்ட 21 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 13,500 ரூபா அபராதம் விதித்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போதே 6 குற்றவாளிகள் உயிரிழந்ததுடன் எஞ்சிய 15 பேரும் துமக்கூரு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.