இந்தியா
Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் ED பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் ED பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கு
பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர், ஆவணங்களின் நகல் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் தான் இருப்பதாகவும், அங்கிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூறினார். இதையே, பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதனிடையே, ஆவணங்களின் நகல் கிடைக்கும் வரை தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனுக்கு பதிலாக அடுத்த சாட்சியிடம் விசாரணை நடத்தலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.