இந்தியா
உடனடி நிவாரணப் பணிகள் தயார் நிலையில்
உடனடி நிவாரணப் பணிகள் தயார் நிலையில்
“வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்றிரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,
தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், சென்னை மாநகர ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தோம். நிவாரண முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் மக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளது. இன்றிரவு புயல் கரையைக் கடக்கும்போது, நிச்சயமாக மழை கடுமையாக இருக்கும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அந்தந்த பகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து இதுவரை எந்தவொரு அசம்பாவிதமான செய்திகள் வரவில்லை. அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இப்போதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்போம். என்றார்.