உலகம்
போயிங் நிறுவனம்: 17,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
போயிங் நிறுவனம்: 17,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமெரிக்காவின் போயிங் கோ நிறுவனமானது, தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்குறைப்பு நடவடிக்கையின் முதல் கட்டப் பணிகளை நிறுவனம் புதன்கிழமை தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்படவிருக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் அறிவித்தல் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆட்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீத ஆட்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது. இது கிட்டத்தட்ட 17,000 ஊழியர்கள் எனத் தரவுகள் கூறுகின்றன. கடந்த ஜனவரியில் போயிங் விமானம் சந்தித்த விபத்துகள், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொடர்ந்து 7 வாரங்கள் நடந்த வேலை நிறுத்தம், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல காரணிகளால் நிறுவனம், ஆட்குறைப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், மிகவும் முக்கியமான பணியிடங்களில் ஆட்களைக் குறைத்துவிட்டால், அதுவே, நிறுவனம் மீண்டும் எழ முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடலாம் என்பதால், மிகுந்த கவனத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.