இந்தியா
உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து – 10 குழந்தைகள் மரணம்
உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து – 10 குழந்தைகள் மரணம்
உத்தரபிரதேச மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 15 முதல் 20 குழந்தைகள் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடைபெற்றதை அறிந்ததும் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்று தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டன.
இதில், காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு என்று முதற்கட்ட தகவல் வந்துள்ளது. இந்த விபத்திற்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.