இந்தியா
டங்ஸ்டன்: “ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” – சு. வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்!
டங்ஸ்டன்: “ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” – சு. வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்!
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேச்சுகள் இருந்துவருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதி மக்கள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கடந்த நவம்பர் 29-ம் தேதி முதலவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், “மதுரை மாவட்டம், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கிய பகுதிகளில் உள்ள அரிட்டாபட்டி என்ற கிராமம், ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்று தலம். இந்தப் பகுதியில், எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடு செய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும். மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. பிரதமர் மோடி இதில் உடனடியாக தலையிட்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பாக நேற்று (30-ம் தேதி) மத்திய சுரங்க அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழ்நாடு அரசு உட்பட எந்த தரப்பிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த ஏலத்தைக் கைவிடுமாறு தமிழக அரசு தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்படவில்லை.
பல்லுயிர் பெருக்கப் பகுதிகள் ஆய்வுக்கு உட்படத்தப்படுவதில்லை. சுரங்கத் துறையின் மேம்பாடு உட்பட பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் தொன்மை, கலாச்சாரம், பாரம்பரிய பாதுகாப்பும் கைகோத்து செயல்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பகுதியில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்.
“கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளது சுரங்கங்கள் அமைச்சகம்.
இதன்மூலம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளது ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம்.
தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மை வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் ஒன்றிய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.
*அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்*.
கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு… https://t.co/VGkijcGw8M
தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும் உரிமையும் துச்சமென மதிக்கும் பா.ஜ.க. அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும்.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது. அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.