இலங்கை
கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றவர் கைது
கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றவர் கைது
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு, பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற நபரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூரை சேர்ந்த தம்பலகாமம் ஈச்சநகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வரும் 38 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த தாய் (வயது-54) மட்டக்களப்பு பொது மருத்துவமனையிலும், மகள் (வயது-31) கந்தளாய் தள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறினர். கத்திக்குத்துக்குள்ளான தாயிடம் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் கடனுக்குப் பணம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதற்காக தாக்குதல் தாரியின் தொலைபேசி திருத்தும் கடைக்கு கத்திக் குள்ளான பெண் சென்று கேட்டுள்ளார்.
அதன் பின்னரே சந்தேக நபர் அந்த தாயின் வீட்டுக்குச் சென்று அவரையும் அவரது மகள் மீதும் கத்திக் குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்கிய நபர், அங்கிருந்த தப்பிச் செல்வதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே செல்ல முயற்சித்த வேளையிலேயே, சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். (ஏ)