வணிகம்
EPFO 3.0: பி.எஃப்., பணத்தை ஏ.டி.எம்-ல் எடுக்கலாம்… புதிய சலுகைகள் என்ன?
EPFO 3.0: பி.எஃப்., பணத்தை ஏ.டி.எம்-ல் எடுக்கலாம்… புதிய சலுகைகள் என்ன?
வருமான வரித்துறையின் சார்பில், ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுபோலவே, ‘பி.எப்., 3.0’ என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாத ஊதியத்தில் தற்போது தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சரிசமமாக 12 சதவீதத்தை பி.எப்., கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பை மட்டும் நீக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பாதுகாப்பான மற்றும் அதேநேரம் நிதிச் சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய பி.எப்., தொகையை, தொழிலாளர் விரும்பினால் கூடுதலாகவும் சேமிக்க இது வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், தொழிலாளர் 12 சதவீதத்துக்கு கூடுதலான தொகையை பி.எப்., கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பி.எப்., கணக்குக்கு, ‘டெபிட் கார்டு’ போல அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் ஒரு பகுதியை திரும்ப பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்ததும், ஏ.டி.எம்-ல் தொகையை தேவைக்கேற்ப சந்தாதாரர் எடுத்துக்கொள்ள இது வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.