இந்தியா
H.Raja: ”பெரியார் சிலை குறித்த கருத்து…” – எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை… சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
H.Raja: ”பெரியார் சிலை குறித்த கருத்து…” – எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை… சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நடைபெற்றது. பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் எச். ராஜா வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ஆம் தேதி தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல், இந்த இரண்டு வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், எச். ராஜா மீதான புகார் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது. எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார்.
மேலும், எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், இரு வழக்கிலும் சேர்த்து 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதால் தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என எச்.ராஜா தரப்பு முறையீடு செய்தது. அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்களுக்கு
தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.