இந்தியா
டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள்: நீதிபதிகள் வேதனை!
டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள்: நீதிபதிகள் வேதனை!
உலக நாடுகள் பிளாஸ்டிக்கை குப்பை தொட்டியில் போடுகின்றன, ஆனால் நாம் அவற்றை வெளியில் வீசுகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் கோடை விடுமுறைகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு போவதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் இப்பகுதிகளுக்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
சுற்றுலாவாசிகளின் வருகை ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்த வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால் அவர்களின் வருகையால், இத்தளங்களின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள். இதனால் அங்கிருக்கும் விலங்குகளும் பாதிப்புக்குள்ளாவது மட்டுமல்லாமல், ஆறு, குலம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக 2019 வருடம் ஊட்டியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிபதிகள் சத்தீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி உள்ள சிறப்பு அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் “உலக நாடுகளில் பிளாஸ்டிக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். ஆனால் நாம் தான் அவற்றை வெளியே வீசுகிறோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம்.
வரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை குறை சொல்ல முடியாது, அவற்றுக்கு நாம்தான் காரணம்” என்று தெரிவித்தனர்.
மேலும் “உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்களது கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.