இந்தியா
நிவாரணம் வழங்க ஏன் நேரில் வரவில்லை? விஜய் விளக்கம்
நிவாரணம் வழங்க ஏன் நேரில் வரவில்லை? விஜய் விளக்கம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தது. இதில், சென்னையில் சில பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக சென்னை, டி.பி.சத்திரம் பகுதி மழையால் பாதிப்பைச் சந்தித்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் இந்த மழையால் பாதிப்பு அடைந்தது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனது கட்சி அலுவலகமான பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினார்.
டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து ஒருவர் என மொத்தம் 250க்கும் மேற்பட்டோரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிவாரணம் வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், அப்படி வந்தால் உங்கள் குறைகளையோ, பிரச்சனைகளையோ கேட்டு அறிந்திருக்க முடியாது. இவ்வளவு சகஜமாக அமர்ந்து பேச முடியாது. அதன் காரணமாக உங்களை இங்கு வரவழைத்து நிவாரணம் வழங்குகிறேன்” என்று விஜய் அவர்களிடம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு புயலின் போது பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று விஜய் நிவாரணம் வழங்கியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. எனவே, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று விஜய் நிவாரணம் வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.