இந்தியா
“இந்த ஆட்சியை குறை கூற எந்தவித தார்மீக உரிமையும் இல்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு பதில்
“இந்த ஆட்சியை குறை கூற எந்தவித தார்மீக உரிமையும் இல்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு பதில்
2- ஆம் தேதி பெய்த கனமழையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுவதாகக் கூறினார்.
அவருக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஆட்சியில் 1,505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், 328 பாலப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிலுவையில் விடப்பட்ட 38 ரயில்வே மேம்பாலங்களும் திமுக ஆட்சியில் தான் கட்டி முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ், ஆட்சியின் போது 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும், கட்டும்போதே, கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் தளவானூர் தடுப்பணை இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. இதையெல்லாம் மறந்துவிட்டு, ஈரைப் பேனாக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிபடியான நீரால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல் 4 மீட்டர் உயரத்திற்கு நீர் வேகமாகச் சென்றதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், அதனாலேயே பாலம் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாகக் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியைக் குறை கூற எந்தவித தார்மீக உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.