பொழுதுபோக்கு
மீண்டும் ‘ஆஸ்கார்’ ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மான்: 3-வது முறை விருது வெல்வாரா?
மீண்டும் ‘ஆஸ்கார்’ ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மான்: 3-வது முறை விருது வெல்வாரா?
ஸ்லாம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மீண்டும் ஆஸ்கார் ரேஸில் இணைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 3-வது ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது உலகம் போற்றும் முக்கின இசை கலைஞராக உருவெடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருதை வென்ற இவர், ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்கார் விருதை ஒரே படத்திற்காக 2 முறை வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், அரபி ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்த ஆடுஜீவிதம் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனதுர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம்.பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், வெளிநாட்டு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட ஒருவரின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான ஆடு ஜீவிதம் படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், உள்ளிட்ட 9 பிரிவுகளில் கேரளா மாநில அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற, ‘பெரியோனே’ என்கிற பாடல், சிறந்த பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் இயக்குநர் பிளஸ்சி விருதை பெற்றுக் கொண்டார்.இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் படம் இடம் பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆடுஜீவிதம் படத்தில் இருந்து, இன்டிக்ஃபேர், புதுமழ ஆகிய இரு பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பின்னணி இசைக்கு 146 படங்கள் தேர்வாகியுள்ளது. இதில் வாக்கெடுப்பு நடத்தி 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பட்டியலுக்கு செல்லும். இதன் மூலம் 3-வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பலரும் அவர் விருது பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“