இந்தியா
வெளி ஆட்களை திருமணம் செய்யக்கூடாது..! கிராம பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட வினோத தீர்மானம்
வெளி ஆட்களை திருமணம் செய்யக்கூடாது..! கிராம பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட வினோத தீர்மானம்
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் ஜவஹர்கே என்ற கிராமம் உள்ளது. இங்கு சமீபத்தில் கிராமவாசிகள் பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தினர். அப்போது வெளியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு வந்துள்ள வெளிநபர்கள் யாரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது என்றும் அதையும் மீறி திருமணம் செய்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகி சுக்செயின் சிங் கூறியதாவது, “இந்த கிராமத்திற்கு அருகில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் வசித்துவருகிறார்கள். அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். இதனால் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போலீசார் எங்கள் கிராமவாசிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சிலரை கைதும் செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களுடன் எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது இயல்பு தான். ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட எவருக்கும் எங்கள் கிராமத்தில் இனி ஆதரவாகவோ, சாட்சியாகவோ அல்லது ஜாமின் வழங்கவோ மாட்டார்கள்.
எங்கள் கிராமத்தில் சுமார் 3,500 பேர் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள். மேலும் இந்த தீர்மானம் புதிது ஒன்றும் கிடையாது. புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்கனவே எங்கள் கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளது” என தெரிவித்தார்.