சினிமா
“பிரேக் தேவை.. இளைப்பாற நினைக்கிறேன்” – ஓய்வு குறித்து விக்ராந்த் மாஸி விளக்கம்!
“பிரேக் தேவை.. இளைப்பாற நினைக்கிறேன்” – ஓய்வு குறித்து விக்ராந்த் மாஸி விளக்கம்!
விக்ராந்த் மாஸி சில நாட்கள் முன் வெளியிட்ட பதிவில், “கடந்த சில வருடங்கள் மிகச் சிறப்பானதாக இருந்தது. நீங்கள் கொடுத்த ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்ல வேண்டிய இந்த நேரத்தில் ஒன்றை உணர்கிறேன். அது, ஒரு கணவனாகவும், ஒரு தந்தையாகவும், ஒரு மகனாகவும் என் வாழ்வை மறு பரிசீலனை செய்வதற்கான நேரமிது, நான் குடும்பத்தை கவனிக்க வேண்டியது நேரமிது என்பது தான். எனவே வரும் 2025 ஆம் ஆண்டில், கடைசியாக நாம் ஒருவரையொருவர் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை அது தொடரும்.” என்று தெரிவித்திருந்தார்.
இதனால் விக்ராந்த் மாஸி ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களுக்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், “எனக்குத் தெரிந்த அனைத்தும் சினிமாவும், சினிமாவில் நடிப்பதுதான். இந்தத் தொழில் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. எனது உடல்நலமும், மனநலமும் சில காலங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரேமாதிரியாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் கொஞ்சம் இளைப்பாற நினைக்கிறேன். அதற்கு எனக்கு அவகாசம் தேவை.
நான் வெளியிட்ட அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. சினிமாவில் இருந்து ஓய்வுபெற போவதாகக் கூறவில்லை. எனக்கு இளைப்பாற அவகாசம் தேவை. அந்த அவகாசத்தில் என் குடும்பத்துடன் நேரம் செலவிடப்போகிறேன். எல்லாம் சரியான பின் சரியான நேரத்தில் மீண்டும் வருவேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
12th ஃபெயில், செக்டர் 36 மற்றும் ஹசீன் தில்ருபா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “சபர்மதி எக்ஸ்பிரஸ்” தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் போல், டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் விக்ராந்த் மாஸி.
‘தூம் மச்சாவோ தூம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2009ல் வெளிவந்த ‘பாலிகா வது’ என்கிற சீரியல் மூலமாக பிரபலமடைய அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. கடந்த சில வருடங்களாகவே இவரின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, பாலிவுட்டில் புதிய ஸ்டாராக உயர்ந்தார்.
கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த ‘12th ஃபெயில்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தனது சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.