இந்தியா
அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்
அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 23ம் தேதி வெளியானாலும், முதல்வர் தேர்வால் கிட்டத்தட்ட 10 நாள்கள் புதிய அரசு பதவி ஏற்பு நடக்காமல் இருந்தது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக தொகுதிகளை வென்ற பாஜக தான் முதல்வர் இருக்கையை அலங்கரிக்கும் என்று சொல்லப்பட்டுவந்தாலும், யார் முதல்வர் என்பதும், முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஏதும் அதிருப்தி தெரிவிப்பாரா என்றும் யூகங்கள் எழுந்துவந்தன.
ஏக்நாத் ஷிண்டே ஒரு கட்டத்தில், “பிரதமர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்றே அறிவித்துவிட்டார். இதனால், நிச்சயம் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதியான அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது.
இந்நிலையில் தான், மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று, அதில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மகாயுதி கூட்டணி தலைவர்கள் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
அதனைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தொழில் அதிபர் முக்கேஷ் அம்பானி அவரது குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், அவரது மனைவி அஞ்சலி, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், சஞ்சய் தத், ஷாரூக் கான், சல்மான் கான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில், அவர் அதீத பாதுகாப்புடன் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா முதல்வர் பதவி ஏற்பில் சல்மான் கான் பங்கேற்றது கவனம் பெற்றது.