இந்தியா
“உயிரிழந்த பாகன் மனைவிக்கு அரசு வேலை” – கருணை அடிப்படையில் பணி நியமனம்…
“உயிரிழந்த பாகன் மனைவிக்கு அரசு வேலை” – கருணை அடிப்படையில் பணி நியமனம்…
பாகன் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த யானை பாகன் மனைவிக்கு கோவில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தெய்வானை என்ற 26 வயதான யானை பராமரிக்கப்பட்டு வருகிறனர். கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த தெய்வானை யானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோயில் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இறந்த இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம், கோவில் நிர்வாகம் சார்பில் 5 லட்சம், கோவில் தக்கார் அருள்முருகன் சார்பில் 3 லட்சம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் யானை பாகன் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்பட பலர் உடன் வந்தனர். அவர்கள் உதயகுமார் மனைவி ரம்யா மற்றும் அவரது மகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதை தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி திருச்செந்தூர் கோவில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறுகையில், “உதயகுமார் குழந்தைகளின் கல்வி செலவை முழுமையாக நாங்களே ஏற்கிறோம். உதயகுமார் மனைவி ரம்யாவிற்கு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.